Thursday, May 31, 2007

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி


1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த இன்னல்மிக்க இத்தருணத்தில் ஸ்மோல்னி மாளிகை லெனின் தலைமையிலான புரட்சி போல்ஷ்விக் கட்சியின் செயல்தளமாகச் செயல்பட்டது. சிறுபான்மை மென்ஷ்விக்கு சமரசவாதிகளும், "சோசலிசப் புரட்சியாளர்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட வலதுசாரிகளும் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து, கெரன்ஸ்கி அரசாங்கம் கூடிய விரைவில் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதாகச் சொல்லி கண்ணா மூச்சி ஆட்டம் ஆடித்தள்ளிப் போட்டு வந்ததையே நியாயப்படுத்தி, மக்களை அமைதியாக இருக்கும்படி கோரிக்கை விட்டனர். இதனால் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து அரசியல் சாகசக்காரன் கெரன்ஸ்கி, பழைய ரசிய இராணுவ ஜெனரல் கர்னீலவ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள்.

இத்தகைய கடுமையான சூழ்நிலையில் லெனினது போல்ஷ்விக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், படையாட்களை ஒருங்கிணைத்து புரட்சியை வழிநடத்தியது.
ரசியப் புரட்சி முதலாளித்துவப் புரட்சிகளைப் போல புதிய உற்பத்திக் கருவிகளை அல்ல, புதிய வகை மனிதர்களையும் மனித உணர்ச்சிகளையும் உருவாக்கியது. பிறருக்காக அனைவருக்காகவும் அனைவரும் சிந்திக்கும் மனித அறிவு மற்றும் உணர்வு நிலையை உலகுக்கு வழங்கியது. கோடானுகோடி மக்களை ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புள்ளியில் இணைக்கும்போது இந்தச் சித்திரம் நமக்கும் முழுமை பெறும்.

(மூலநூலான ஜான் ரீடின் "உலகைக் குலுக்கிய பத்து நாட்களி'லிருந்து சிறு பகுதியை கீழே வெளியிடுகிறோம்.)

நவம்பர் 8, 1917: ஸ்மோல்னியில் சூழ்நிலை முன்பு இருந்ததையும்விட கடுமையாகி ஒரே அமர்க்களமாயிருந்தது. இருண்ட நடைவழிகளில் முன்பு போலவே ஆட்கள் சிட்டாய்ப் பறந்தனர்; தொழிலாளர் குழுவினர் துப்பாக்கி ஏந்தி நின்றனர்; தடித்த கைப்பைகள் வைத்திருந்த தலைவர்கள், நண்பர்களும் துணைவர்களும் புடை சூழ்ந்து வர, வாதாடிக் கொண்டும் விளக்கிச் சொல்லிக் கொண்டும் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் பரபரக்க விரைந்து சென்றனர். மெய்யாகவே இவர்கள் மெய்மறந்தோராய் இயங்கினார்கள். இராப் பகலாய்க் கண் துஞ்சாமல் ஓயாது உழைக்கும் அருந்திறல் படைத்தோராய் இருந்தார்கள் — முகம் மழிக்கப்படவில்லை. மேலெல்லாம் அழுக்கு, கண்கள் சிவந்து ஜிவுஜி வுத்தன. அடங்காத ஆர்வத்தை விசையாய்க் கொண்டு தமது நிலையான குறிக்கோளை நோக்கி இவர்கள் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் செய்ய வேண்டியிருந்தவை நிறைய இருந்தன, அளவின்றி நிறைய இருந்தன! அரசாங்கத்தை உருவாக்கியாக வேண்டும், நகரில் ஒழுங்கை நிலைபெறச் செய்தாக வேண்டும், நகரக் காவல் படையைத் தம் பக்கத்தை விட்டுச் செல்லாதிருக்கும்படி பார்த்துக் கொண்டாக வேண்டும், டூமாவையும் இரட்சணியக் கமிட்டியையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும், ஜெர்மானியரை உள்ளே விடாதிருக்க வேண்டும், கேரென்ஸ்கியுடன் போர் புரியத் தயார் செய்தாக வேண்டும், என்ன நடந்திருக்கிறதென்று மாநிலங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும், அர்ஹான்கேல்ஸ்கிலிருந்து விளதிவஸ்தோக் வரையில் பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

சரியாய் எட்டு நாற்பதுக்கு, இடியென அதிர்ந்த வாழ்த்துக்க ளுக்கும் கையொலி முழக்கத்துக்கும் இடையே தலைமைக் குழுவினர் உள்ளே வந்தார்கள், அவர்களிடையே லெனினும் மேதை லெனினும் இருந்தார். லெனின் விசித்திரமான மக்கள் தலைவர் முற்றிலும் அறிவாற்றல் என்னும் ஒரேதகுதியின் காரணமாய்த் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை, தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை, படாடோபமான தனிப் பாணிகள் இல்லை ஆனால் ஆழ்ந்த கருத்துக்களை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமையைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலை நோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.

இப்போது லெனின் உரைமேடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். சிமிட்டிக் கொண்ட அவரது சிறு கண்கள் பிரதிநிதிகளது கூட்டத்தின் மீது ஒரு தரம் வட்டமிட்டு விட்டு வந்தன. கையொலி முழக்கம் நிற்பதற்காக அவர் காத்திருந்தார். ஓயாமல் சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த முழக்கம் அவரைப் பாதித்ததாய்த் தெரியவில்லை. அது நின்றதும் மிகவும் எளிய முறையில் அவர் சுருக்கமாய்க் கூறினார்: ""இப்போது நாம் சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கலாம்!'' திரும்பவும் கட்டுக்கடங்காத ஆர்வ முழக்கம்.

""சமாதானத்தைக் கைகூடச் செய்வதற்கு நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நம் முன்னுள்ள முதலாவது பணி... போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் சோவியத்து வரையறைகளின் அடிப்படையில் பிரதேசம் பிடித்தல் இல்லை, இழப்பீடுகள் இல்லை, தேசங்களது சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமாதானத்தை முன்மொழிவோம். அதேபோது ஏற்கெனவே நாம் வாக்களித்தது போல், இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டு, பழையனவற்றை நிராகரிப்போம்... யுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றிய பிரச்சினை தெட்டத் தெளிவானது. ஆகவே, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் பிரகடனம் என்பதான இந்தத் திட்டத்தை இங்கு நான் முன்னுரை எதுவும் இல்லாமலே படித்துக் காட்டலாமென நினைக்கிறேன்...''

""போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பிரகடனம்: நவம்பர் 6,7ஆம் நாள் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்டு, தொழிலாளர்கள், படையாட்களை, விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்துகளை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த தொழிலாளர்கள், விவசாயிகளது அரசாங்கம் நேர்மையான, ஜனநாயகத் தன்மையதான சமாதானத்திற்காக உடனே பேச்சவார்த்தைகள் தொடங்கும்படி, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அவர்களது அரசாங்கங்களுக்கும் முன்மொழிகிறது....''

இடியென அதிர்ந்த கையொலி முழக்கம் பிரகடனத்தை வரவேற்றது. லெனின் தொடர்ந்து விளக்கிப் பேசினார்.

மணி சரியாய் 10.35 ஆயிற்று, பிரகடனத்துக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோரும் அவர்களது பிரதிநிதிச் சீட்டுகளை உயர்த்திக் காட்ட வேண்டுமென்று கூறினார் காமெனெவ். பிரகடனம் ஒருமனதாய் ஏற்கப்பட்டது.

சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் ஒரு திடீர் உணர்ச்சியால் உந்தப்பட்டு எழுந்து நின்று, ஒரே குரலாய் ஒருங்கிணையும் வண்ணம் சர்வதேசியக் கீதம் பாட முற்பட்டோம். தலை நரைத்த முதுபெரும் படையாள் ஒருவர் சிறு குழந்தை போல் விம்மியழுதார். அலெக்சாந்திரா கொலன்தாய்ழூ சட்டெனக் கண்ணீர்த் துளியைத் துடைத்து அகற்றிக் கொண்டார். அந்த ஆழ்ந்த பண்ணொலி மண்டபத்தில் பெருக்கெடுத்து, சன்னல்களையும், கதவுகளையும் அதிரச் செய்து, வெளியே நிசப்த வானத்துள் உயர்ந்து எழுந்தது. ""யுத்தம் முடிவுற்றது! யுத்தம் முடிவுற்றது!'' என் அருகே நின்ற இளந்தொழிலாளி ஒருவர் முகம் பளிச்சிட்டு ஒளிரக் கூறினார்.

கீதம் முடிவுற்ற நிசப்தத்தால் சங்கடப்படுவோராய் நாங்கள் நின்று கொண்டிருந்த அக்கணத்தில் மண்டபத்தின் பின் வரிசையிலிருந்து பலத்த குரலில் கூறினார் ஒருவர்: ""தோழர்களே! சுதந்திரத்துக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்வோம்!'' உடனே எல்லோருமாய்ச் சேர்ந்து சவ அடக்கப் பண்ணை இசைக்க ஆரம்பித்தோம். அடிமேல் அடி வைத்துச் செல்லும் துயரார்ந்த பண். ஆயினும் வெற்றியை முழங்குவது, முழுக்க முழுக்க ரசியப் பண்ணாய் அமைந்தது. நெஞ்சை நெக்குருகச் செய்வது. சவ அடக்கப் பண் இருளில் வதைந்த ரசியப் பெருந்திரளினரது இதயத்தின் பண்ணாய் ஒலிப்பது இந்தப் பெருந்திரளினரின் பிரதிநிதிகள்தான் இம்மண்டபத்தில் அமர்ந்து, தெளிவின்றி மங்கலாய்த் தமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு புதிய ரசியாவை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வெஞ்சமரில் உயிர் நீத்தீர்

வீரத் தியாகிகளாய், மக்கள்தம்

விடுதலைக்காக,
மக்கள்தம் மானம் காக்க...

இன்னுயிர் ஈந்தீர், உயிரனையவை யாவும் ஈந்தீர்;

கொடுஞ் சிறையில் வதைபட்டீர்,

கொடுமைக்கோர் அளவில்லை,

கடுங்காவல் கைதிகளாய்ச்

சங்கிலிகளில் தொலைவிடங்கள்

சென்றீர்...

சங்கிலி சுமந்து உடல் வருந்தினீர்,

உள்ளம் வருந்தவில்லை,

பட்டினியில் வதைந்த உம்

சோதரரையே

உள்ளத்தில் நினைத்திருந்தீர்;

ஒடுக்குவோரின் வாள் வீழ்ந்துபடும்,

நீதி வெல்லுமென அஞ்சாது நின்றீர்....

நீவீர் ஈந்த இன்னுயிரின் வெற்றிநாள்

இதோ வருகிறது;

கொடுங்கோன்மை தகர்ந்துவிழும், தளையறுந்து

பேருருவினராய் எழுவர் மக்கள்!

சென்று வருக சோதரர்காள்!

அழியாப் புகழ்கொண்ட

பாதை உமது பாதை!

புதுப்படை வருகிறது

உமைத் தொடர்ந்து,

சாவுக்கு அஞ்சாத படை...

சென்றுவருக சோதரர்காள்!

அழியாப் புகழ் கொண்ட

பாதை உமது பாதை!

சூளுரைக்கிறோம் உமது சமாதியில், விடுதலைக்காக,

மக்கள் தம் இன்ப வாழ்வுக்காக,

போராட, பாடுபட சபதம் ஏற்கிறோம்...

இதற்காகத்தான் அங்கே துஞ்சுகிறார்கள், மார்ச் மாதத்தியாகிகள் குளிரில் அமைந்த அவர்தம் சோதரத்துவச் சமாதியிலே. இதற்காகத்தான் ஆயிரமாயிரமாய் மடிந்தார்கள் சிறைக்கூடங்களில், தொலைவிடங்களில், சைபீரியச் சுரங்கங்களில்... இது வந்த விதம் இவர்கள் எதிர்பார்த்தது போன்றதாயில்லை, அறிவுத்துறையினர் விரும்பியது போன்றதாகவும் இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது இது கரடுமுரடானது, பெரும் பலம் படைத்தது, சூத்திரங்களுக்கு அடங்காதது, உணர்ச்சிப் பசப்புகளை மதியாதது; மெய்யானது...

மு பஷீர்

அலெக்சாந்திரா கொலன்தாய் (1872 1952): 1915லிருந்து போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினர், நவம்பர் புரட்சிக்குப் பிறகு பொதுநலத்துறை மக்கள் கமிசார்.

Saturday, May 26, 2007

லாலுவின் நிர்வாகத் "திறமை":கொல்லைப்புற வழியில் தனியார்மயம் கட்டணக் கொள்ளை

""நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல் சமூகநீதி பேசும் பத்திரிகைகள் வரை இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) பயிலும் மாணவர்களிடம், இலாபமீட்டும் இரகசியத்தைப் பாடம் நடத்தும் அளவுக்கு அவரது பெருமையும், புகழும் பெருகியுள்ளதாக முதலாளித்துவ மூதறிஞர்கள் பாராட்டுகின்றனர்.

1980களில் 7.6 சதவீதமாக இருந்த இரயில்வே துறையின் வளர்ச்சி விகிதம் 1990களில் 6.56 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இந்நிலையில், இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக லாலுபிரசாத் யாதவ் மாற்றியுள்ளார் என்றால், அவர் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்துள்ளதா, என்ன! அதுவும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே அவரால் எப்படி இந்த அதிசயத்தைச் செய்ய முடிந்தது?

1990களில் இரயில்வே துறையின் பல முக்கியமான மீட்டர்கேஜ் பாதைகள், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன; டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட தடங்கள் பெருமளவில் மின்சாரமயமாக்கப்பட்டன; பல தடங்களில் இருவழிப் பாதைகள் போடப்பட்டன; பெரும்பாலான ரயில் நிலையங்களின் ""சிக்னல்கள்'' தானியங்கியாக மாற்றப்பட்டன. இவ்வாறு மிகப் பெரிய இரயில்வே துறையின் அடிக்கட்டுமானங்களை நவீனமயப்படுத்த பல்லாயிரங் கோடிகள் செலவிடப்பட்டதால், அந்த பத்தாண்டுகளில் இரயில்வே துறையின் இலாப விகிதம் குறைந்து போனது.

இம்முதலீடுகள் எல்லாம் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக பலன் தரத் தொடங்கியுள்ளன. நாட்டின் இரயில்வே தடங்களில் 70 சதவீதமாக உள்ள அகலப்பாதைகள்தான், இப்போது 95 சதவீத சரக்குப் போக்குவரத்துக்கும், 89 சதவீத பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படுகின்றன என்பதிலிருந்தே 1990களில் போடப்பட்ட அகலப்பாதைகளின் பங்களிப்பு புலனாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலைப் போக்குவரத்துடன் போட்டியிடும் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் இரயில்வே துறை வளர்ந்துள்ளது. அகலப் பாதைகள் அமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக, மூலதன அழுத்தம் கொண்ட இரயில்வே துறை இப்போது மெதுவாக வளர்ச்சியடைந்து பலன்தரத் தொடங்கியதும், இதையே லாலுவின் நிர்வாகத் திறன் என்று முதலாளித்துவவாதிகள் உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.

நவீனமயப்படுத்தலால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து, பலன்கள் கிடைப்பது ஒருபுறமிருக்க, இலாபமீட்டும் துறையாக இரயில்வே துறையை மாற்றிய லாலுவின் "திறமை'தான் என்ன? பேருந்துகளிலோ சந்தையிலோ ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அதையே அரசாங்கம் செய்தால் அது நிர்வாகத் திறமை என்பதுதான் லாலு கண்டுபிடித்துள்ள உத்தி.
சாதாரண தொடர் வண்டிகள் (பாசஞ்சர்) அனைத்தும் எவ்வித வசதிகளுமின்றி விரைவு வண்டிகள் (எக்ஸ்பிரஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவு வண்டிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல விரைவு வண்டிகள் அதிவிரைவு வண்டிகள் (சூப்பர் ஃபாஸ்ட்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டபூர்வமாகவே கட்டணக் கொள்ளை தொடர்கிறது.

புறப்படும் இடத்திலிருந்து அல்லாமல், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம்; முன்பதிவு செய்யப்படும் படுக்கையில், கீழ்தளப் படுக்கைக்குக் கூடுதல் கட்டணம் என்று அங்கேயும் வழிப்பறி; அவசர அவசியம் கருதி உடனடியாக படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்காக சற்று கூடுதல் கட்டணமுறையுடன் இருந்த ""தட்கல்'' திட்டத்தை வரைமுறையின்றி விரிவுபடுத்தி பலமடங்குக் கூடுதல் கட்டணக் கொள்ளை; 90 நாட்களுக்கு முன்னரே இணையதளம் மூலம் எத்தனை பயணச் சீட்டுகளையும் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இணையதள வசதியில்லாதவர்கள் அவசரப் பயணத்திற்காக வேறுவழியின்றி ""தட்கல்'' திட்டத்துக்கு துரத்தப்பட்டு அங்கே கூடுதல் கட்டணத்தைக் கொட்டியழ வேண்டிய நிலை; முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் இழப்பீடு தொகை இரு மடங்கு உயர்வு என பல வழிகளிலும் நூதனமான வழிப்பறி செய்கிறது இரயில்வே துறை.

தொடர்ந்து ஈராண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்று கூசாமல் புளுகிக் கொண்டு புதிய உத்திகளுடன் வழிப்பறி செய்து வரும் லாலு, ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, செலவுகள் குறைந்து ஆதாயம் பெருகியுள்ளதாகக் கணக்கு காட்டுகிறார். இரயில்வே துறையால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் டாண்டன் கமிட்டி, ராகேஷ்மோகன் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த தொழிலாளர் விரோத, தனியார்மய நடவடிக்கைகளே இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடைநிலை ஊழியர்களான ""கலாசி'' தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வேலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். தண்டவாளங்களில் விரிசலைக் கண்டறிந்து பழுது நீக்குதல், தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லி இறுகி விடாமல் சீரமைத்தல் பராமரித்தல், ரயில் பெட்டிகளைத் துப்புரவு செய்தல், ரயில் நிலையங்களைப் பராமரித்தல், ரயில்வே குடியிருப்புகள், உணவகம், முன்பதிவு சேவை, ஆளற்ற லெவல் கிராசிங்குகள், பாலங்களைக் கண்காணித்தல் முதலான இரயில்வே துறையே முன்னர் செய்துவந்த பணிகள் அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்க்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் 15 சதவீதமும் தற்காலிக ஊழியர்களில் 100 சதவீதமும் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர். அதிவேக ரயில்கள் சிறிய ஊர்களில் நிற்காது என்று காரணம் காட்டி, பல ரயில் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில் ஆட்குறைப்பு காரணமாக ஊழியர்கள் மீது கூடுதல் வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இரயில்வே துறையின் இலாபத்துக்கு முக்கிய காரணமாகும்.

இதுதவிர, ""ஈ டிக்கெட்டிங்'' முறை மூலம் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் வாயிலாக பயணச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்து, ஆட்குறைப்புக்கும் அதன்மூலம் அதிகலாபத்துக்கும் திட்டம் தீட்டி வருகிறார் லாலு. ஏற்கெனவே தனியாருடன் சேர்ந்து 225 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் லாலு. இந்திய ரயில்வேக்குச் சொந்தமாக நாடெங்குமுள்ள 10,000 ஏக்கர் உபரி நிலங்களைத் தனியாருக்கு விற்று ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டவும், ரயில்வே கட்டிடங்களில் தனியாருடன் இணைந்து தங்கும் விடுதிகள், பேரங்காடிகள், திரையரங்குகளை நிறுவவும் திட்டங்கள் தயாராக உள்ளன. வருவாய் அதிகம் கிடைத்துவரும் முக்கியமான சரக்கு ரயில் நிலையங்களையும் பயணிகள் ரயில் நிலையங்களையும் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான பம்பார்டியர், ஜெனரல் எலக்டிரிகல்ஸ் ஆகியன இதற்குப் பேரங்களை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பயணிகள் பெட்டிகளையும் சரக்கு ரயில் பெட்டிகளையும் 15 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 500 கோடி அளவுக்கு இரயில்வே துறை ஆதாயம் ஈட்டியுள்ளதால், இதை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோததனியார்மய நடவடிக்கைகளால் விரைவில் 3 லட்சம் ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேலையிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளனர்.

விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களை அனுமதித்து வந்தது போய், இப்போது ஒரு ரயிலையே விளம்பரத்துக்காக பெயரிட்டு இயக்குமளவுக்கு தனியார்மயத்தில் மூழ்கி முத்தெடுக்கிறார், லாலு. கொலைகார கோக்கின் பங்காளி நிறுவனமான பெப்சி குளிர்பான கம்பெனியின் ""குர்குரே'' எனும் நொறுக்குத் தீனியை விளம்பரப்படுத்துவதற்காகவே ""குர்குரே எக்ஸ்பிரஸ்'' இயக்கப்படுகிறது.
உணவு மற்றும் பிற சேவைகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டதன் மூலம், உபரியாக உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1000 கோடி அளவுக்குச் செலவுகள் குறைந்துள்ளதாகப் பெருமைப்படும் லாலு, இத்திட்டத்தை நாடெங்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
சமூகநீதி, இடஒதுக்கீடு பேசும் பிற்பட்டோர் நலச் சங்கங்களில் பூஜிக்கப்படும் லாலுவால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஊழியர்களாவர். கடைநிலை ஊழியர்களான இவர்களின் வயிற்றிலடித்துதான், இலாபக் கணக்கு காட்டுகிறார் லாலு. பால்கோ போன்ற அரசுத்துறை நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் அல்லாமல், படிப்படியாக இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் புதிய உத்தி; ஒட்டு மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வீதியில் வீசியெறியும் நரித்தனம்; விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, உள்வட்டப் பேருந்து என்றெல்லாம் பெயரிட்டு கட்டணக் கொள்ளையை நடத்தும் தி.மு.க. அரசை விஞ்சும் சட்டபூர்வ வழிப்பறி இவைதான் இரயில்வே அமைச்சர் லாலுவின் நிர்வாகத் திறன்!

இதனால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ""கோமாளி, ஊழல் பெருச்சாளி, கிரிமினல் அரசியல்வாதி, மாட்டுக்கார வேலன்'' என்றெல்லாம் நக்கலடித்து சாடி வந்த பார்ப்பனபனியா பத்திரிகைகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் இன்று அவரை ""டாப் டென்'' அமைச்சர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

· கவி

Monday, May 14, 2007

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது !

வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.
.
ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டதுமுன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.
.
விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்
'குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.
.
மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.
"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் மே 2007 இருந்து

தொடர்புடைய பதிவுகள் :

" புதிய கலாச்சாரம்" மே 2007

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது