Monday, July 23, 2007

தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! தொடரும் பிரச்சார இயக்கம்


""தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் அடிப்படையில் மறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான ""கோக்''கிற்கு எதிராகவும் தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு.; பு.மா.இ.மு.; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த செப்.12ஆம் தேதியன்று நெல்லையில் மிகப்பெரிய பேரணி ஆர்ப்பாட்டத்தையும், "கோக்' ஆலை அமைந்துள்ள நெல்லை கங்கை கொண்டானில் மறியல் போராட்டத்தையும் நடத்தின.

தாமிரவருணியை நம்பியிருக்கும் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் வேளையில் தாமிரவருணியை உறிஞ்ச கோக்கிற்கு தாராள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் ""சிப்காட்'' நிறுவனம் கோக்கிற்கு தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் 1 லிட்டர் கோக் தயாரிக்கும் போது, நிலத்தடியில் உள்ள 48 லிட்டர் நல்ல நீர் கழிவு நீராக மாறும். இதனால்தான் கேரளாவில் கோக் ஆலை இயங்கிய பிளாச்சிமடா கிராமம் சுடுகாடாகிப் போய்விட்டது. கோக் ஆலை அமையவுள்ள கங்கை கொண்டான் பஞ்சாயத்தில் அடங்கியுள்ள மானூர் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சன், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய பிறகு மர்மமான முறையில் இறந்து போயுள்ளார். கோக்கை அனுமதித்தால் தாமிரவருணி ஆறும் இந்த மண்ணும்கூட மர்மமான முறையில் மரணமடையும்.

இந்த உண்மைகளை விளக்கியும், தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்ட அணிதிரள அறைகூவியும் புரட்சிகர அமைப்புகள் நெல்லைதூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை ஏறத்தாழ 20 தோழர்கள் தாமிரவருணி கரையோரக் கிராமங்களில் அன்றாடம் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தெருமுனைக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக இப்பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர்கள், கிராம மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையொப்பமும் பெற்றனர்.

புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதைக் கண்டு பீதியடைந்த நெல்லை மாவட்டப் போலீசு, வெளிப்படையாகவே கோக்கின் அடியாளாகச் செயல்பட்டது. மாவட்டம் முழுவதும் 302ஏ பிரிவு சட்டத்தை ஏவி பிரச்சாரத்துக்குத் தடை விதித்தது. பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டியது. கிராம மக்களிடம் ""இவர்கள் நக்சல்பாரி தீவிரவாதிகள்; கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் அவர்களது விண்ணப்பத்தில் கையெழுத்து போடாதீர்கள்; மீறி கையெழுத்து போட்டால் உங்கள் மீது வழக்கு போடுவோம்; கோர்ட் வாய்தா என்று நீங்கள் அலைய வேண்டி வரும்'' என்று அச்சுறுத்தியது.

போலீசின் தடைகள், அச்சுறுத்தல்களையும் மீறி நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் பிரச்சாரம் மற்றும் மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தோழர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளதோடு, பல பத்தாயிரக்கணக்கான மக்களிடம் கோக்கிற்கு எதிரான பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர்.

ஏறத்தாழ 45 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு உண்ண உணவும் இரவில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மக்கள், தாராளமாக நன்கொடை அளித்து இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். சில கிராமங்களில், உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்து, தோழர்களைக் கைது செய்ய போலீசு தேடி வந்தபோது, கிராம மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்து ஆதரித்தனர். ""தாமிரவருணி எங்கள் ஆறு; அமெரிக்க கோக்கே வெளியேறு'' என்ற போராட்டப் பாடல், இப்போது எல்லா கிராம மக்களும் விரும்பி இசைக்கும் பாடலாகியுள்ளது.
..
கோக் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு விளக்கியதைத் தொடர்ந்து, கோக் ஆலைக்கு வேலைக்குச் செல்வதை அவமானமாகக் கருதி, பல கூலித் தொழிலாளிகள் அவ்வேலையிலிருந்து விலகி விட்டனர். சில இளைஞர்கள், கோக் ஆலையில் வேலைக்குச் சேருவதற்காக வாங்கி வைத்திருந்த விண்ணப்பத்தை, மக்கள் முன்பாக சுக்குநூறாகக் கிழித்தெறிந்து தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தினர். பல கிராமங்களில், கோக் ஆலைக்கு ஆதரவாகப் பேசும் ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களிடம் வாதம் செய்து மக்கள் காறி உமிழ்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர்.
..
பணபலத்தையும் அரசு மற்றும் போலீசின் அதிகார பலத்தையும் கொண்டு, ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியைத் தொடங்கப் போவதாகக் கொக்கரிக்கிறது அமெரிக்க கோக் நிறுவனம். அதற்கெதிராக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்கும் மகத்தான பணியை புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தொடரும் பிரச்சார இயக்கத்தால் உணர்வு பெற்று வரும் மக்கள், நாளை பெரும் சூறாவளியாகத் திரண்டெழுந்து அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
..
பு.ஜ. செய்தியாளர்கள்.

1 comment:

Anonymous said...

நல்ல கட்டுரை.

கோக்கை விரட்டுவது ஒரு பக்கம் நடக்கட்டும்.
இந்தப் பக்கம், கோக் வாங்கிக் குடிப்பதை அனைவரும் கைவிடவேண்டும்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது