Sunday, June 24, 2007

ஐயா, எங்கள் சாதி எது?

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?
..
உங்களுக்காக ஒரு வீட்டை நாங்கள் கட்டுகிற போது
களிமண்ணைப் பிசைந்து செங்கல் செய்கிற போது
உங்களுக்காக தானிய மூட்டைகளைச் சுமக்கிற போது
காலி வயிற்றுடன் நிலத்தை நாங்கள் உழுகிற போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

புகைக் கூண்டுகளைப்போல எங்கள் குடல்கள்
ஆவியையும் நெருப்பையும் கக்கிய போது
காசநோயால் இருமிக் கொண்டு
மலைபோல் நிலக்கரியைத் தோண்டி எடுத்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

தீய்ந்து போன ரொட்டி மண்டைகளைத் தின்று கொண்டு
ஈரமான நிலத்தை நாங்கள் கிளறிய போது
எரிக்கும் வெயிலில் சாமி சிலைகளை
நாங்கள் தூக்கிய போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

கோயிலுக்கு நீங்கள் பூக்களை எடுத்துச் செல்வதற்காக,
பூக்கூடைகளை நாங்கள் பின்னியபோது
நீங்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவற்காக
காகிதங்களை நாங்கள் செய்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

மிருகங்களை நாங்கள் சாகடித்து
உங்களுக்காக செருப்புகளைச் செய்தபோது
உண்பதற்கு சிறு பருக்கை கூட இல்லாமல்
உங்களுக்காக நாங்கள் பானைகள் செய்தபோது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

நீங்கள் சாமியார்களாவதற்காக
உங்கள் தலைகள் நாங்கள் மொட்டையடித்த போது
உங்கள் அழுக்குத் துணிகளை
மல்லிகைப்பூ வெண்மையாக நாங்கள் துவைத்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

உங்கள் நீண்ட கதைகள் எல்லாம்
அழுகிப் போய்க் கொண்டிருக்கின்றன.
இன்னும் கதைகள் தேவையில்லை.
உலுத்துப் போன உங்கள் தேர்
இனியும் ஓடாது.
அது உடைந்தே விட்டது.

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

நீங்கள் எங்களைச் சாதிகளாக
சாதிகளுக்குள் கோந்திரங்களாக பிரித்தீர்கள்.
ஆனால்
நாங்கள்
ஒருங்கிணைந்து கை கோர்த்து நின்றுவிட்டால்

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?
-- -
- செரபண்ட ராஜூ

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது